سُورَةُ النَّصْر
ஸூரதுன் நஸ்ர்
PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CILICK செய்யவும்!
பெயர் : ஸூரதுன் நஸ்ர் (உதவி)
இறங்கிய காலப்பகுதி : மதனீ
வசனங்கள் : 3
சிறப்பு :
உபைத்துல்லாஹ் அவர்களிடம் இப்னு அபபாஸ் ரலி அவர்கள், இப்னு உத்பாவே அல்குர்ஆனில் கடைசியாக, முழுவதுமாக இறங்கிய ஸூராவை நீ அறிவாயா? என்று கேட்க, ஆம், அது ‘இதா ஜாஅ நஸ்ருல்லாஹ்’ தான் என்று கூறவே, நீ உண்மையுரைத்து விட்டாய். என்று கூறினார்கள். (முஸ்லிம்: 5758)
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்: உமர்(ரலி) அவர்கள் பத்ருப் போரில் பங்கெடுத்த வயதில் மூத்தவர்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். எனவே, அவர்களில் சிலர், ‘எங்களுக்கும் இவரைப் போன்ற பிள்ளைகள் இருக்க, இந்த இளைஞரை மட்டும் எதற்காக அமரச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலி), ‘அவர் நீங்கள் அறிந்து வைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர்’ என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒரு நாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள். அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள்; அவர்களுக்கு என்னைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன். (அவர்களெல்லாம் வந்தவுடன் அவர்களிடம்) உமர்(ரலி) அவர்கள், ‘இதா ஜாஅ நஸ்ருல்லாஹி.. என்னும் (திருக்குர்ஆனின் 110-வது ‘அந்நஸ்ர்’) அத்தியாயத்தை, இறுதிவரை ஓதிக்காட்டி, ‘இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அவர்களில் சிலர், ‘நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும்போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்’ என்று (விளக்கம்) கூறினர். சிலர், ‘எங்களுக்குத் தெரியாது’ என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை. பிறகு உமர்(ரலி) என்னிடம், ‘இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித் தான் கூறுகிறீர்களா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்றேன். அவர்கள், ‘அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். நான், ‘அது, அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முடிந்து விட்டதை அறிவிப்பதாகும். எனவே, ‘அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டது’ என்பதில் உள்ள ‘வெற்றி’ என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றி தான், (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். எனவே, நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து தூய்மைப்படுத்தி, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் உங்களுக்கு மிகவும் மன்னிப்பளிப்பவனாவான்’ என்பதே இதன் கருத்தாகும்’ என்று சொன்னேன். உமர்(ரலி), ‘நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகிறீர்களோ அதையே நானும் அறிகிறேன்’ என்று கூறினார்கள். (புகாரி: 4294,4970, முஸ்லிம்)
ஆஇஷா ரலி அவர்கள் கூறினார்கள்: ஸூரா நஸ்ர் இறங்கிய பிறகு நபியவர்கள் எந்த தொழுகை தொழுதாலும் அதில், நபி(ஸல்) அவர்கள் தம் ருகூவிலும் சுஜூதிலும், ‘சுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்ம மக்பிர்லீ’ என்று பிரார்த்திப்பார்கள். (புகாரி: 4293,4967, முஸ்லிம்)
ஆஇஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் அதிகமாக “ஸுப்ஹானக வபிஹம்திக, அஸ்தக்பிருக வஅதூபு இலைக’ (மற்றோரு அறிவிப்பில்) ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, அஸ்தக்பிருல்லாஹ வஅதூபு இலைஹி’ என்று கூறிவந்தார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் “«سُبْحَانَكَ وَبِحَمْدِكَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ» (மற்றோரு அறிவிப்பில்) «سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوبُ إِلَيْهِ»” என்று அதிகமாக கூறிவருவதை நான் காண்கிறேன் (இதற்கு என்ன காரணம்?) என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்: “என் சமுதாயத்தார் தொடர்பாக நான் ஓர் அடையாளத்தைக் காண்பேன் என்றும், அதைக் காணும்போது இந்த தஸ்பீஹை நான் அதிகமாக ஓத வேண்டும் என்றும் என் இறைவன் எனக்கு அறிவித்திருந்தான். அந்த அடையாளத்தை நான் கண்டுவிட்டேன். அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து, மேலும்,அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டங்கூட்டமாக நுழைவதை நீங்கள் காணும்போது உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக; மேலும், அவனிடமே பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் பாவமன்னிப்புக் கோரலை அதிகம் ஏற்பவனாக இருக்கிறான் (110:1-3). இதில் வெற்றி என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். (முஸ்லிம்: 835, 837)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُۙ
اِذَا ஆல் உருபு/போது/நிபந்தனையிடுவதற்கு பாவிக்கப்படும், جَآءَ வந்தான், نَصْرُ உதவி, وَ மேலும்/இன்னும், الْفَتْحُ வெற்றி/திறத்தல்
(நபியே! உமக்கு) அல்லாஹ்வுடைய உதவி மற்றும் (மக்காவின்) வெற்றி வரும்போது- (110:1)
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறினார்கள்: “இந்த வசனத்தில் ‘உதவி {النَّصْرِ }, வெற்றி {الْفَتْحِ}’ என்ற இரண்டு சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன, அவை ஒன்று ஒன்றோடு பின்னிப்பிணைந்ததாகும். அதேநேரம் வெற்றி பொதுவாக வந்திருப்பதோடு, உதவி அல்லாஹ்வோடு சேர்ந்து ‘அல்லாஹ்வின் உதவி’ என்று வந்துள்ளது. முதல் விடயம்; இந்த ஸூரா மக்கா வெற்றிக்கு பிறகு இறங்கியது என்பதில் அறிஞர்கள் ஒன்றுபட்டுள்ளனர், அதேநேரம், இந்த மக்கா வெற்றிக்கு முன்னர் பலவெற்றிகள் ஈட்டப்பட்டுள்ளன என்பது அறியப்பட்ட உண்மை. அவற்றில் உள்ளதே, கைபர் வெற்றி,ஹுதைபிய்யா ஒப்பந்தம், அதனை அல்லாஹ் வெற்றி என்றே கூறியுள்ளான்.
فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوْا فَجَعَلَ مِنْ دُوْنِ ذٰلِكَ فَتْحًا قَرِيْبًا
ஆகவே, நீங்கள் அறியாதிருந்ததை (முன்னதாகவே அல்லாஹ்) அறிந்திருந்தான், பின்னர், இதுவன்றி சமீபத்தில் ஒரு வெற்றியையும் (உங்களுக்கு) ஆக்கினான். (48:27)
உதவி எனும்போது; யுத்த களங்களில் கிடைக்கும், அது ஆதாரங்கள் அதிகாரங்களைக் கொண்டும் கிடைக்கும், அஹ்ஸாப் யுத்தத்தில் நடந்ததுபோன்று விரோதிகளை தடுப்பது கொண்டும் கிடைக்கும். அல்லாஹ் கூறுகின்றான் :
وَرَدَّ اللّٰهُ الَّذِيْنَ كَفَرُوْا بِغَيْظِهِمْ لَمْ يَنَالُوْا خَيْرًا ؕ وَكَفَى اللّٰهُ الْمُؤْمِنِيْنَ الْقِتَالَ ؕ وَكَانَ اللّٰهُ قَوِيًّا عَزِيْزًا ۚ
மேலும், நிராகரித்து விட்டார்களே அத்தகையோரை_அவர்களுடைய கடுங்கோபத்தில் அல்லாஹ் திருப்பி விட்டான், (இந்த யுத்தத்தில்) அவர்கள் யாதொரு நன்மையை(யும்) அடையவில்லை, (அகழ்) யுத்தத்தில் விசுவாசிகளுக்கு (வெற்றியளிக்க) அல்லாஹ் போதுமானவனாக இருந்தான், மேலும், அல்லாஹ் (யாவரையும் விட) மிக்க பலமிக்கவனாக (யாவரையும்) மிகைத்தவனாக இருக்கின்றான். (33:25)
யூதர்கள் விடயத்திலும் உதவி இப்படியே இருந்தது, அல்லாஹ் கூறுகின்றான்:
وَاَنْزَلَ الَّذِيْنَ ظَاهَرُوْهُمْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ مِنْ صَيَاصِيْهِمْ وَقَذَفَ فِىْ قُلُوْبِهِمُ الرُّعْبَ فَرِيْقًا تَقْتُلُوْنَ وَتَاْسِرُوْنَ فَرِيْقًا ۚ 26 وَاَوْرَثَكُمْ اَرْضَهُمْ وَدِيَارَهُمْ وَ اَمْوَالَهُمْ وَاَرْضًا لَّمْ تَطَــــٴُـوْهَا ؕ وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرًا
இன்னும் வேதக்காரர்களிலிருந்து, அ(ப்பகை)வர்களுக்கு உதவி செய்தார்களே அவர்களை, அவர்களுடைய கோட்டையிலிருந்து (அல்லாஹ்) இறக்கிவிட்டான், அவர்களுடைய இதயங்களில் கடும் பயத்தையும் போட்டு விட்டான், (ஆகவே) ஒரு சாராரை நீங்கள் கொன்று விட்டீர்கள், (மற்றும்) ஒரு சாராரை நீங்கள் சிறைபிடித்தும் கொண்டீர்கள். (26), இன்னும், (அல்லாஹ்வாகிய) அவன் அவர்களுடைய பூமி, மற்றும் அவர்களுடைய வீடுகள் மற்றும் அவர்களுடைய செல்வங்கள் இன்னும் (இதுவரையில்) நீங்கள் மிதித்திராத (அவர்களுடைய மற்ற) பூமி ஆகியவற்றிற்கு உங்களை வாரிசாக்கினான், மேலும் அல்லாஹ், ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கிறான். (33:26,27)
எனவே உதவுதல் என்பது அல்லாஹ்விடமிருந்தது வருவதாகும். அல்லாஹ் கூறுகிறான்:
وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِۙ
இன்னும் மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோனாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி (உங்களுக்கு) இல்லை. (3:126)
முஸ்லிம்கள் அதனை அறிந்தே வைத்துள்ளனர். அல்லாஹ் கூறுகிறான்:
مَسَّتْهُمُ الْبَاْسَآءُ وَالضَّرَّآءُ وَزُلْزِلُوْا حَتّٰى يَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰى نَصْرُ اللّٰهِؕ
அவர்களை வறுமையும் பிணியும் பீடித்தன. தூதரும் அவருடன் விசுவாசங்கொண்டவர்களும் அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது வந்து சேரும்) என்று கூறும் அளவுக்கு அவர்கள் (இன்னல்கள் பலவற்றால்) அலைக்கழிக்கப்பட்டு விட்டார்கள், .. (2:214)
அந்த முஸ்லிம்கள் இப்படி உதவியை எதிர்பார்த்து கேட்டார்கள், அல்லாஹ்வின் பதில் பின்வருமாறு வந்தது;
اَلَاۤ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِيْبٌ
“தெரிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக மிகச் சமீபத்திலிருக்கிறது” (என்று கூறப்பட்டது). (2:214.)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ஒரு மாதகால அளவு பயம் (விரோதிகளின் உள்ளத்தில்) போடப்படுவதுகொண்டு நான் உதவிசெய்யப்பட்டேன். (புகாரி:335, முஸ்லிம்)
அல்லாஹ் மூஸா நபியவர்களுக்கும், அவரது சகோதரர் ஹாரூன் அவர்களுக்கும் கூறினான்:
قَالَ لَا تَخَافَآ اِنَّنِىْ مَعَكُمَاۤ اَسْمَعُ وَاَرٰى
“நீங்கள் இருவரும் பயப்பட வேண்டாம், நிச்சயமாக நான் உங்களிருவருடன் (யாவையும்) கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருப்பேன் என (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்”. (20:46)
இது உதவுவதன் மூலமும், உறுதிப்படுத்துவதன் மூலமும் அல்லாஹ் உடனிருப்பதாகும்.
எனவே உதவுதல் என்று இங்கு நாடப்படுவது பொதுவானதாகும். அதே போன்று தான் மார்க்கத்தில் வெற்றி என்பது இஸ்லாம் பரவுவதன் மூலம் ஏற்படும், அந்தவகையில் மிகப்பெரிய வெற்றியாக ஹுதைபிய்யா வெற்றியையும், மக்கா வெற்றியையும் குறிப்பிடலாம். ஏனெனில் முதலாவது வெற்றி இரண்டாவது வெற்றிக்கான களம் அமைத்தலாகும், இரண்டாவது வெற்றி, அரேபிய தீபகற்பத்தில் இருந்த இணைவைப்பை தீர்த்துக்கட்டுவதாகும். இது வெற்றியும் உதவியும் பொதுவாக நாடப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தும் சான்றாகும். (அல்வாஉல் பயான்)
وَرَاَيْتَ النَّاسَ يَدْخُلُوْنَ فِىْ دِيْنِ اللّٰهِ اَفْوَاجًا ۙ
وَرَاَيْتَ இன்னும் நீர் பார்த்தாய்/கண்டாய், النَّاسَ மக்கள், يَدْخُلُوْنَ நுழைவார்கள்/கிறார்கள், فِىْ லே/ல், دِيْنِ மார்க்கம்/கூலி, اَفْوَاجًا கூட்டம் கூட்டமாக
இன்னும், மனிதர்களை – அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கூட்டங்கூட்டமாக பிரவேசிப்பவர்களாக (நபியே) நீர் காணும்போது- (110:2)
இமாம் ஷன்கீதி ரஹ் கூறினார்கள்: இந்த வசனம் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவார்கள் என்று கூறுவதிலிருந்து, யமன் உற்பட மக்கள் எல்லா திசைகளிலிருந்தும் இஸ்லாத்தை நோக்கி வந்தார்கள் என்ற இந்த நிகழ்வு, நபிகளாரின் அழைப்புப் பணி பூர்த்தியாவதையும், தூதுத்துவம் வெற்றிபெறுவதையும் அறிவிக்கின்றது. அதற்கு சான்றாக அந்த ஆண்டு நபிகளார் நிறைவேற்றிய ஹஜ்ஜின்போது இறங்கிய 5:3 வது வசனம் இருக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:
اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا ؕ فَمَنِ اضْطُرَّ فِىْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
.. இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாமாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன், .. (5:3)
அடுத்து வெற்றி என்றால் மக்கா வெற்றிக்கு முன்னாலும் பல வெற்றிகள் கிடைக்கப்பெற்றது போன்று, அதற்கு பிறகும் பல வெற்றிகள் கிடக்கும் என்ற வாக்குறுதியும் இருக்கின்றது. நபியவர்கள் அகல் யுத்தத்திற்காக குழிகளை தோண்டிக்கொண்டிருக்கும் போது, ஒரு பாறாங்கல்லை உடைக்கும்போது எடுத்துறைத்தார்கள். (புகாரி: 4101,(கல்லு வெளிப்பட்டது மட்டும்), நஸாஇ: 3176 விரிவாக பதியப்பட்டுள்ளது.) இது பற்றிய அறிவிப்புக்கள் அனைத்தும் விமர்சனங்ககளுக்கு உற்பட்டவையே, ஒன்று ஒன்றை பலப்படுத்தும் என்ற அடிப்படையில் ஹஸன் தரத்தில் நோக்கலாம். அதேநேரம் முஅத்தா மாலிக்கின் அறிவிப்பில் (3309) யமன், ஷாம், இராக் வெற்றிகொள்ளப்படுவது நம்பகமான அறிவிப்பாளர் தொடர் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. யமன் தவிர்ந்த இந்த வெற்றிகள் அனைத்தும் நபிகளாரின் மரணத்திற்கு பின்னரே பெறப்பப்பட்டன. (அல்வாஉல் பயான்)
மக்கா வெற்றி ஹிஜ்ரி எட்டிலும், கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்கும் நிகழ்வு ஹிஜ்ரி ஒன்பதிலும், யமன் கூட்டத்தினர் வந்தனர், நபியவர்கள் மக்கா வெற்றிக்கு பின்னர் யமனுக்கு பொறுப்பாளிகளை அனுப்பிவைத்தார்கள், அலி ரலி அவர்கள் ஹிஜ்ரி பத்தில் ஹஜ் காலப்பகுதியில் யமனிலிருந்து வந்தார்கள், எனவே நபிகளாரின் வாழ்நாளிலேயே மக்கா வெற்றிக்கு பிறகு யமன் வெற்றிகொள்ளப்பட்டுள்ளது. எனவே வெற்றி என்பதைக்கொண்டு மக்கா வெற்றி மட்டும் நாடப்படவில்லை. அதற்கு ஆதாரமாக பின்வரும் வசனத்தை குறிப்பிடலாம்.
وَاَذِّنْ فِى النَّاسِ بِالْحَجِّ يَاْتُوْكَ رِجَالًا وَّعَلٰى كُلِّ ضَامِرٍ يَّاْتِيْنَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيْقٍ ۙ
“ஹஜ்ஜுக்காக நீர் மனிதர்களை அழைப்பீராக!” அவர்கள் நடந்தவர்களாக உம்மிடம் வருவார்கள், இன்னும், இளைத்த (களைப்புற்ற) ஒட்டகங்களின் மீது (வருவார்கள்.) அவை தூரமான ஒவ்வொரு வழியிலிருந்தும் வரும். (22:27)
மக்கள் தூர இடங்களிலிருந்து வருவார்கள் என்பது இஸ்லாத்தை ஏற்பார்கள் என்பதை குறிக்கிறது, அடுத்து முஸ்லிம்கள் தூர இடங்களிலிருந்து வருவார்கள் என்பது தெரிகிறது, அதுவே (வெற்றி என்பதைக் கொண்டு மக்கா வெற்றி மட்டும் நாடப்படவில்லை) என்பதற்கு சான்று பகரும் இடமாகும். (அல்வாஉல் பயான், அல்லாஹு அஃலம்)
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ؔؕ اِنَّهٗ كَانَ تَوَّابًا
فَ எனவே/ஆகவே, سَبِّحْ நீ தூய்மைப்படுத்து, بِ கொண்டு/மூலம், حَمْدِ புகழ், رَبِّكَ உம் இறைவன், وَ இன்னும்/மேலும், اسْتَغْفِرْ நீ மன்னிப்புக் கோரு, هُ அவன்/அவனை, اِنَّه நிச்சயமாக அவன்/ எழுவாய் பயனிலை அவசியம், كَانَ ஆகிவிட்டான்/எழுவாய் பயனிலை அவசியம், تَوَّابًا மிகவும் மன்னிப்பவன்
உமதிரட்சகனின் புகழை துதி செய்வீராக! மேலும், அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக! நிச்சயமாக அவன் பாவமீழ்ச்சியை மிகவும் ஏற்றுக்கொள்பவனாக இருக்கிறான். (110:3)
இந்த வசனத்தில் துதித்தல்{ سَبِّح} என்பது புகழ்வதோடு { حَمْد } சேர்க்கப்பட்டுள்ளது, இது ஸூராவின் ஆரம்பத்தோடும், அதன் கருப்பொருளோடும் இணைந்ததாகும், ஏனெனில் நபிகளாரின் தூதுத்துவம் முழுமைப் பெறுவதோடு அல்லாஹ்வின் உதவியும் நபிகளாருக்கும், முஃமின்களுக்கும், இஸ்லாத்திற்கும் வருகிறது, மேலும் பொதுவான வெற்றிவாய்ப்பும் முஸ்லிம்களுக்கு கிடைத்து, அந்த வாக்குறுதிக்கு அமைவாக முஸ்லிம்கள் பல பகுதிகளை வெற்றிகொள்வதும் நிறைவேறுகிறது என்றால், அது பெரும் அருளாகும், அதற்கு நன்றி செலுத்துவதையும் அது கடமையாக்கும், எனவே அந்த அருளைத் தந்தவன் புகழுக்கு தகுதியாகின்றான். எனவே அதற்கு நிகராக புகழுடன் துதித்தல் சேர்க்கப்பட்டுள்ளது. ‘உமது இறைவனின் புகழ்’ என்பது தூய்மையான அல்லாஹ்வே அந்த அருளை தந்தவன் என்பதை உணர்த்துவதாகும். இது ஸூரா ளுஹாவில் அல்லாஹ் கூறுவதை போன்றாகும்.
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىؕ
(நபியே!) உமதிரட்சகன் உம்மைக் கைவிடவில்லை, (உம்மை) அவன் வெறுக்கவுமில்லை. (93:3)
மேலும் ஸூரா அலகில் உமது இறைவன் பெயர் கொண்டு ஓதுவீராக! என்று திரும்ப திரும்ப வந்திருப்பது போன்றாகும்,
اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ.. اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ
உம்முடைய இரட்சகனின் (சங்கையான) பெயரைக்கொண்டு நீர் ஓதுவீராக! அவன் எத்தகையவனென்றால் (படைப்பினங்கள் அனைத்தையும்) படைத்தான்.(1) நீர் ஓதுவீராக! மேலும், உமதிரட்சகன் மிக்க சங்கையானவன். (96:3)
ஏனெனில் அல்லாஹ்வின் அதிகார பன்பை எடுத்துரைப்பது, அவன் செய்யும் அருளை உணர்த்துவதாகும். (அல்வாஉல் பயான்)
இந்த ஸூராவுக்கு விளக்கம் கூறிய இமாம் இப்னு கஸீர் ரஹ் அவர்கள் கூறினார்கள்: உமர் ரலி அவர்களது சபையிலிருந்த சில நபித்தோழர்கள் இந்த ஸூராவுக்கு ‘அல்லாஹ் நாடுகளையோ, நகரங்களையோ வெற்றிகொள்ளும் வாய்ப்பைக் கொடுத்தால் அவனை புகழுமாறும், அவனிடம் மன்னிப்பு கேட்குமாறும் ஏவியுள்ளான்.’ என்று கூறிய விளக்கத்துக்கு அமைவாக, நாம் தொழுவோம், அவனிடம் மன்னிப்புக் கோருவோம். என்று கூறுவது நல்லதோர் கருத்தாகும். மேலும் நபி ஸல் அவர்கள் மக்கா வெற்றிகொள்ளப்பட்ட நாளன்று ளுஹா (முற்பகல்) நேரத்தில் எட்டு ரக்அத்கள் தொழுதார்கள் என்பதும் அதற்கான ஒரு சான்றாகும். சில அறிஞர்கள் அதனை ‘ளுஹா தொழுகை’ என்று கூறியதற்கு, ‘நபியவர்கள் அதனை தொடர்ந்து தொழவில்லை, மக்காவில் தரித்து நிற்கும் எண்ணமில்லாமல், பயணியாக இருந்து கொண்டு, எப்படி அந்த நாளில் தொழுதார்கள், எனவேதான் , பத்தாயிரம் பேர் வரையிலிருந்த அவர்களுடன் மக்காவில் நபியவர்கள் ரமலான் முடியும் வரை சுமாராக பத்தொன்பது நாட்கள், நோன்பையும் விட்டவர்களாக, தொழுகையையும் சுறுக்கியவர்களாக இருந்தார்கள்.’ என்று மறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கூறினார்கள்; அது வெற்றிக்காக தொழப்பட்ட தொழுகையே, எனவே ஒரு நகரத்தை வெற்றிகொண்டால் அதற்குள் நுழைந்தவுடன் எட்டு ரக்அத்கள் தொழுமாறு படைத்தளபதி ஏவுவது நல்லதாகும்’ என்று கூறினார்கள்.
இவ்வாறே ஸஃத் பின் அபீவக்காஸ் ரலி அவர்கள், மாதாஇணை வெற்றிகொண்டபோது செய்தார்கள். அவர்களுள் சிலர், ‘எட்டு ரக்அத்களையும் ஒரு ஸலாத்தோடு தொழுவார்கள்’ என்று கூறினர், ஆனால் சரியானது, ‘இரண்டு ரக்அத்களில் ஸலாம் கொடுக்க வேண்டும்’ என்பதே. அபூதாவூதில் (1290. அதன் அறிவிப்பில் அய்யால் பின் அப்தில்லாஹ் என்ற “முன்கர்” என்று விமர்சிக்கப்பட்ட அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார்.) ‘நபி ஸல் அவர்கள் மக்கா வெற்றிகொள்ளப்பட்ட அன்று ஒவ்வொரு இரண்டு ரக்அத்களிலும் ஸலாம் கொடுத்தார்கள்’ என்று பதியப்பட்டுள்ளது. (இப்னு கஸீர்)
அதேநேரம்; இப்னு அப்பாஸ், இப்னு உமர் ரலி ஆகியோர் ‘இந்த ஸூரா நபியவர்கள் தங்களது மரணம் நெருங்கிவிட்டது என்பதை முன்னறிவித்ததாகும்’ என்று கூறிய விளக்கமானது; “”நீர் அறிந்துகொள்வீராக!, நீர் மக்காவை வெற்றிகொண்டு, மக்களும் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைந்துவிட்டால், உலகில் உங்களுடனான எங்களுக்கான தேவை முடிந்துவிட்டது, எனவே எங்கள் பக்கம் வருவதற்கு நீங்கள் தயாராகுங்கள், மறுமை உலகைவிட உங்களுக்கு சிறந்ததாகும், அங்கு உங்களுக்கு அவன் அன்பளிப்புகளை கொடுப்பான் அதனை பொருந்திக்கொள்வீர்கள். எனவேதான் அல்லாஹ் ‘உங்களது இறைவனை துதித்து, அவனிடம் பாவமன்னிப்பு தேடுங்கள், அவன் மிகவும் மன்னிப்பவனாக இருக்கிறான்.’ என்று கூறுகின்றான்.”” என்பதாகும். அதற்கு ஆதாரமாக புகாரி (4968) இலக்க நபிமொழியை கொண்டுவந்தார்கள்.(இப்னு கஸீர்)
அடுத்து இந்த வசனங்களில் வெற்றி என்று நாடப்படுவது மக்கா வெற்றிதான் என்று ஒரே கருத்தாக கூறப்பட்டுள்ளது, ஏனெனில் அரேபிய குலத்தவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்காக மக்கா வெற்றிகொள்ளப்படுவதையே எதிர்பார்த்திருந்தார்கள். அவர்கள், ‘அவர் தனது சமூகத்தை வெற்றிகொண்டால் அவர் இறைத்தூதர் தான்’ என்று கூறினார்கள், அல்லாஹ் வெற்றியைக் கொடுத்தபோது கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைந்தார்கள், இரண்டு வருடங்கள் முடிவடைவதற்குள் அரேபிய தீபகற்பம் முழுக்கவும் ஈமானால் பரிபூரணமானது. எந்த அரேபிய கோத்திரமாக இருந்தாலும் இஸ்லாத்தையே அது வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது. அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
அம்ர் இப்னு ஸலமா(ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், ‘மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?’ என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், ‘அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத்தூதராக) அனுப்பியிருப்பதாக.. அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாக கூறுகிறார்’ என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக்காட்டி) கூறுவார்கள். உடனே நான் அந்த வசனங்களை மனனம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிந்துவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்திருந்தார்கள். எனவே, அவர்கள், ‘அவரை அவரின் குலத்தா(ரான குறைஷிய)ருடன்விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)’ என்று கூறினார்கள். மக்கா வெற்றி சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து சென்று இஸ்லாத்தை ஏற்றார்.. (புகாரி: 4302) (இப்னு கஸீர்)
இமாம் ஷன்கீதி ரஹ் கூறினார்கள்: ‘ وَاسْتَغْفِرْهُ’ என்பதற்கு சிலர், ‘பாவமன்னிப்பு என்பது பாவத்திற்கே, இங்கு எந்த பாவத்திற்கு மன்னிப்பு தேடுவது?’ என்று கேட்கின்றனர். நபிமார்கள் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் என்ற கருத்து 94:2 வது வசனமான ‘உங்களை விட்டும் உங்களது பாவத்தை நாம் வைத்துவிட்டோம்’ என்ற வசனத்திற்க்கு விளக்கத்தில் நோக்கினோம்.
இங்கு சுட்டிக்காட்டுவதற்கு மிகவும் பொருத்தமானது; ‘பாவமன்னிப்பு என்பது நபிமார்களின் பிரார்த்தனையாகும்.’ என்பதே. ஆதம் நபியவர்களது நிகழ்வுடன் நாம் ஆரம்பித்தால், அதிலே அல்லாஹ் கூறுகின்றான்:
فَتَلَقّٰٓى اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَيْهِ
(பின்னர்) ஆதம், சில வாக்கியங்களைத் தன் இரட்சகனிடமிருந்து பெற்றுக் கொண்டார்; அதனால் (அல்லாஹ்) அவரின் பாவமீட்சியை அங்கீகரித்தான்; (2:37)
அந்த தவ்பாவை கட்டாயமாக்கியது என்னவென்பது அறியப்பட்டதே, பிறகு நூஹ் நபியவர்களை எடுத்தால், அவர்கள்:
رَبِّ اغْفِرْلِىْ وَلِـوَالِدَىَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِؕ
“என் இரட்சகனே! எனக்கும், என்னுடைய பெற்றோருக்கும், விசுவாசம் கொண்டவராக என்னுடைய வீட்டில் நுழைந்தவருக்கும் விசுவாசங்கொண்ட ஆண்களுக்கும், விசுவாசங்கொண்ட பெண்களுக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக! (71:28)
என்று பிரார்த்தித்தாக இடம்பெற்றுள்ளது, இப்ராஹீம் நபியவர்கள் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ
‘எங்கள் இரட்சகனே “ஹஜ்ஜுக்குரிய எங்களுடைய கிரியை செய்யவேண்டிய இடங்களையும் எங்களுக்குக் காண்பிப்பாயாக (எங்கள் பிழைகளை மன்னித்து) எங்களின் தவ்பாவையும் அங்கிகரித்துகொள்வாயாக! நிச்சயமாக நீயே தவ்பாக்களை மிக்க ஏற்பவன், மிகக் கிருபையுடையவன்!” (2:128)
என்று பாவமன்னிப்பு தேடியதாக வந்துள்ளது. இதனை வைத்து சில அறிஞர்கள்: “பாவமன்னிப்பு தேடுதல் என்பதே அல்லாஹ்வை துதிப்பது போன்ற ஒரு வணக்கமாகும், எனவே அதற்கு பாவம் இருந்தால்தான் மன்னிப்பு தேடவேண்டும் என்ற கடமையில்லை” என்று கூறினர். ஒரு சிலர், ‘நபிமார்கள் தம் சமூகத்திற்கு பாவமன்னிப்பு தேடுவதை கற்றுக்கொடுக்கவே இப்படி செய்தனர்‘ என்று கூறினர், இன்னும் சிலர், ‘அதன் மூலம் நபியவர்களின் அந்தஸ்த்தை உயர்த்தவே இப்படி வழிகாட்டினான்‘ என்று கூறினர்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: மக்களே! நீங்கள் அல்லாஹ் அளவில் பாவமன்னிப்பு தேடி மீழுங்கள், ஏனெனில் நான் அல்லாஹ் அளவில் ஒரு நாளைக்கு நூறு தடவைகள் பாவமீழ்ச்சி தேடுகிறேன்.’ ( முஸ்லிம்:5234,5235)
எனவே பாவமன்னிப்பு தேடுதல், அல்லாஹ்வின் பக்கம் மீளுதல் என்பதே நன்மைகளை அதிகப்படுத்துவதற்கான வழியாகும். (அல்வாஉல் பயான்)
அறிஞர் ஸமக்ஷரீ கூறும் போது: அல்லாஹ்வை துதித்து, பாவமன்னிப்பு தேடுமாறு கட்டளையிடப்பட்டதானது, பாவத்தை விட்டு ஒதுங்கி, வழிபாடுகளில் ஈடுபடுவதற்குமிடையில் ஒன்று சேர்ப்பதன் மூலம் மார்க்க விடயத்தை நிலைநாட்டுவதற்கான கட்டளையை பூரணப்படுத்துவதாகும். நபியவர்கள் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டிருந்தும் அப்படி கட்டளையிடப்பட்டிருப்பது தனது சமுதாயத்திற்கு காட்டும் கனிவாகும், ஏனெனில் பாவமன்னிப்பு தேடுவதென்பது பணிவின் அடையாளம் என்பதோடு, உளக்கட்டுப்பாடாகும்,எனவே அதுவே ஒரு வணக்கமாகும். (அல்கஷ்ஷாப்)
நான் அறிந்து கொண்டது!
அறிஞர்களது இந்த கூற்றுக்களை நோக்கும் போது; இஸ்திஃபார் பாவமன்னிப்புத்தேடுதல் தனித்துவமான ஒரு வணக்கம், இறைவனுக்கான அடிமைத்துவ வெளிப்பாடு, இறைக்கட்டுப்பாடு, மனிதன் பாவம் செய்யும் இயல்புகொண்டவன் என்ற சிந்தனை கட்டிக்காக்கப்படல் போன்ற பல நலவுகள் இருப்பதை பார்க்கலாம். இந்த பயன்பாட்டை புரிந்தால் ”ஏன் நபியவர்கள் பாவமன்னிப்புத் தேடவேண்டும்” என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும்.
பாவ மன்னிப்பு தேடல் ஒரு சில அடிப்படைகள்;
இஸ்திஃபார் அடிமைத்துவத்தின் அடையாளம்:
அல்லாஹ் மனிதர்களை நோக்கி ‘தன்னைத் தானே சுத்தப்படுத்த வேண்டாம்‘ என்று கூறியுள்ளான், எனவே ஒருவன் பாவமன்னிப்பு தேடுவதே, தான் மனிதன் என்பதற்கும், தன்னைத் தானே சுத்தப்படுத்தாமல் இருப்பதற்கும் அடையாளமாகும், இதனால் தான் நபிமார்கள், குறிப்பாக நபி ஸல் அவர்கள் ஒவ்வொரு நாளும் நூறு தடவைகள் பாவமன்னிப்பு தேடியுள்ளார்கள். சுவன வாசிகளின் அடையாளமாக இது கூறப்பட்டுள்ளது என்றால் ஏன் அவர்கள் பாவமன்னிப்பு தேடவேண்டும் என்று சிந்தித்தால் அதனை புரிந்து கொள்ளலாம். அல்லாஹ் கூறுகின்றான்:
فَلَا تُزَكُّوْۤا اَنْفُسَكُمْ ؕ هُوَ اَعْلَمُ بِمَنِ اتَّقٰى
ஆகவே, நீங்களே உங்களை (தூய்மையானவர்களென எண்ணிக்கொண்டு) பரிசுத்தப்படுத்திக் கொள்ளவேண்டாம், (உங்களில்) பயபக்தியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான். (53:32)
اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ .. .. وَبِالْاَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُوْنَ
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (சுவனபதிகளின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். .. .. மேலும், அவர்கள் விடியற்காலை(ஸஹர் நேரங்)களில் மன்னிப்புக்கோரிக் கொண்டிருப்பார்கள். (51:15…18)
இறைக் கட்டுப்பாட்டின் அடையாளம்:
ஒரு முஸ்லிம் கழிவறையிலிருந்து வெளியேறினால் அவன் ‘குப்ராணக்‘ (இறைவா மன்னிப்பாயாக) என்று கூறவேண்டும், தொழுகை முடிந்தால் ‘அஸ்தஃபிருல்லாஹ்‘ (அல்லாஹ்விடம் நான் மன்னிப்பு தேடுகிறேன்) என்று மூன்று தடவைகள் கூறவேண்டும். என்கிறது இஸ்லாம். ஏன் எதற்காக என்ற கேள்விகளுக்கு அப்பால், இஸ்லாம் சொல்கிறது நான் கட்டுப்படுவேன் என்பதே அடிப்படை, எனவேதான் வெற்றிவாகை சூடுகின்ற மனிதன் பெருமையடிப்பதே அடிப்படை, ஆனால் இஸ்லாம் நபியவர்களுக்கு ‘பாவமன்னிப்பு தேடுவீராக’ என்று கூறி, கட்டுப்பாட்டை வலியுறுத்தியுள்ளது.
உலக நலவுகளை தாங்கிவரும் அடிப்படை:
பாவமன்னிப்பு தேடுவது வெறுமனே செய்த பாவங்களை எடுத்துக் கூறுவதல்ல, ‘அஸ்தஃபிருல்லாஹ்’ என்றால், செய்த பாவத்தை குறித்து சொல்லாமல், பொதுப்படையாக மன்னிப்பு தேடுவதே, இதில் பொதுப்படையான, மனிதன் உணராமல் செய்கிற பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது ஒரு பக்கம், இன்னொரு விதத்தில் பல உலக நலவுகளைக் கொண்டுவரும் என்பதும் அடிப்படை. அல்லாஹ் கூறுகின்றான்:
فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْؕ اِنَّهٗ كَانَ غَفَّارًا ۙ يُّرْسِلِ السَّمَآءَ عَلَيْكُمْ مِّدْرَارًا وَّيُمْدِدْكُمْ بِاَمْوَالٍ وَّبَنِيْنَ وَيَجْعَلْ لَّـكُمْ جَنّٰتٍ وَّيَجْعَلْ لَّـكُمْ اَنْهٰرًا مَا لَـكُمْ لَا تَرْجُوْنَ لِلّٰهِ وَقَارًا
ஆகவே, “உங்கள் இரட்சகனிடம் மன்னிப்புத் தேடுங்கள், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான்” (10), “(அவ்வாறு செய்வீர்களாயின்) மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவான்”(11), செல்வங்களையும், ஆண் மக்களையும் கொண்டு உங்களுக்கு உதவி புரிவான், உங்களுக்காகத் தோட்டங்களையும் தந்து, உங்களுக்காக ஆறுகளையும் ஓடச்செய்வான்.”(12), (ஆனாலும்) “அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் அறிந்து கொள்ளாமலிருக்க உங்களுக்கென்ன நேர்ந்தது?” என்றும் கூறினேன். (71:10-13)
எனவே இஸ்திஃபார் பாவமன்னிப்பு தேடுவதற்கு இத்துணை காரணிகள் இருக்கும் போது ‘எந்த பாவத்திற்காக நபியவர்கள் பாவமன்னிப்பு தேட வேண்டும்’ என்பதை விடவும், ‘ஏன் பாவமன்னிப்பு தேடாமல் இருக்க வேண்டும்’ என்று கேட்பதே பொருத்தமாக இருக்கும். (அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்)
ஸூரா நஸ்ரின் விளக்கம் முற்றுப் பெறுகிறது.
وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ